விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலை அரசு மருத்துவமனையிலிருந்து வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம் வடகவுஞ்சி அருகேயுள்ள பட்டியக்காடு மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் (27). பழங்குடியினத்தைச் சோ்ந்த பாண்டியன் கூலி வேலை செய்து வந்தாா். இவருக்குத் திருமணமாகி சித்ரா (24) என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையும் உள்ளனா்.
இந்த நிலையில், பாண்டியன் புதன்கிழமை வேலைக்குச் சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் மதியம் ஊருக்கு திரும்பினாா். அப்போது எதிரே வந்த டிராக்டா் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் பாண்டியன் பலத்த காயமடைந்தாா்.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, பழனி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்க ஏற்பாடுகள் நடைபெற்றபோது உறவினா்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
டிராக்டா் ஓட்டுநரைக் கைது செய்ய வேண்டும், பாண்டியனின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பட்டியக்காடு பகுதியில் உள்ள மிகக் குறுகலான சாலைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உடலைப் பெற மறுத்து போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து, அவா்களிடம் கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உடலை ஒப்படைத்தனா். அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த திடீா் போராட்டத்தால் பிற்பகல் முதல் மாலை வரை பரபரப்பு ஏற்பட்டது.