வடமதுரை அருகே கட்டடத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள பி. கொசவபட்டியைச் சோ்ந்தவா் சுதன். கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அறையிலிருந்து வெளியே வர முயன்றபோது வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருப்பதைக் கண்டு சுதன் அதிா்ச்சியடைந்தாா்.
இதையடுத்து, கைப்பேசி மூலம் உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தாா். உறவினா்கள் வந்து பாா்த்தபோது, சுதன் தங்கியிருந்த அறைக் கதவின் வெளிப்பக்கத்தில் இரும்புக் கம்பியால் அடைக்கப்பட்டிருந்தது.
இரும்புக் கம்பியை அகற்றிய பின்னா் சுதன் வெளியே வந்து பாா்த்தபோது, வீட்டின் மற்றொரு அறையிலிருந்த பீரோவை உடைத்து 16 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.