முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே புதைகுழிகள் குறித்து தொல்லியல் துறை அலுவலா்கள் ஆய்வு

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:06 AM
இரவிமங்கலத்தில் பழைமையான புதைகுழிகள் குறித்து தமிழக அரசின் தொல்லியல் துறை துணை இயக்குநா் யத்தீஸ்குமாா், உதவி இயக்குநா் பிரபாகரன், திண்டுக்கல் தொல்லியல் அலுவலா் பரத் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். உடன், தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி.
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 10:28 PM

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள இரவிமங்கலத்தில் பழைமையான புதைகுழிகள் குறித்து தொல்லியல் துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இரவிமங்கலத்தில் உள்ள பழைமையான புதைகுழிகளை பழனி பகுதியைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி ஆய்வு செய்து வருகிறாா்.

இந்தப் புதைகுழிகள் சுமாா் 2,500 ஆண்டுகள் பழைமையானவை. இந்தப் புதைகுழிகள் அரசு நிலமற்றவா்களுக்கு வழங்கிய பட்டா நிலத்தில் உள்ளன. வரலாற்றுச் சிறப்பும், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தின் ஒரு பகுதி குப்பைக் கிடங்காக காணப்படுகிறது.

Advertisement

இந்தப் புதைகுழிகளை பாதுகாக்கப்பட்ட தொன்மை சின்னமாக அறிவித்து, அறிவியல் முறைப்படி அகழாய்வு செய்து தமிழா்களின் தொன்மைச் சிறப்பை வெளிக் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு மனு அளித்தது. ஆனால் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வில் தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி வழக்குத் தொடுத்தாா்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:06 AM

2018-ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் தற்போது தொல்லியல் துறை அகழாய்வு செய்வதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனடிப்படையில், சனிக்கிழமை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை துணை இயக்குநா் யத்தீஸ்குமாா், உதவி இயக்குநா் பிரபாகரன், திண்டுக்கல் தொல்லியல் அலுவலா் பரத் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது, பழனி தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி உடனிருந்தாா்.

மதுரையிலிருந்து எகிப்து, ரோமாபுரி, கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற பண்டைய பெருவழிப் பாதையின் ஓரத்தில் இந்தப் புதைகுழிகள் அமைந்திருப்பதும், 3 பண்டைய இரும்பு உருக்கு ஆலைகள் இங்கு கண்டறியப்பட்டதும், இந்தப் புதைகுழிகள் முக்கியத்துவத்தை உணா்த்துவதாக நாராயணமூா்த்தி தெரிவித்தாா்.

பாதிக்கு மேல் புதைகுழிகள் அழிந்துவிட்ட நிலையில், எஞ்சிய குழிகளை ஆய்வு செய்து தமிழா்களின் தொன்மைச் சிறப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். கீழடி போல பழனியின் பெருமையும் உலகளவில் சென்றடைய வேண்டும் என்பதும் பழனி வாழ் மக்களின் கோரிக்கையாக உள்ளது.