மதுரை அருகே 17 பவுன் நகைகள் கொள்ளை
மதுரை அருகே சனிக்கிழமை அதிகாலையில், பூட்டிய வீட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மதுரை அருகே சனிக்கிழமை அதிகாலையில், பூட்டிய வீட்டை உடைத்து 17 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் வெள்ளிக்கிழமை மாலை தனது வீட்டைப் பூட்டிவிட்டு, துக்கம் விசாரிப்பதற்காக உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்துள்ளார். இவர்கள், சனிக்கிழமை அதிகாலை வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 17 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக, ரமேஷ் அளித்த புகாரின்பேரில், டி. கல்லுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
மேலும், சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் வந்திருந்து கைரேகைகளை பதிவு செய்தனர்.
மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர், கடந்த 9 ஆம் தேதி தனது மகளை மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருந்தார். அப்போது, இவரது வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து, ஊமச்சிகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.