திருநகர் பகுதிகளில் மாநகராட்சியினர் கொசு மருந்து அடிக்காமலும், குப்பைகளை அள்ளாமலும் இருப்பதால் வைரஸ் காய்ச்சல் பரவுகிறதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மதுரை மாநகராட்சி 98 ஆவது வார்டுக்கு உள்பட்டது திருநகர். இப்பகுதி சாலையோரங்களில் மழைநீர் தேங்குவது, கண்மாய்களுக்கு செல்லும் கால்வாய்களில் உள்ள கழிவுநீர், பூட்டிக்கிடக்கும் வீடுகளில் தேங்கும் மழைநீர் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் பரவியது. இதனால் இப்பகுதியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் இப்பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஆய்வு செய்து மழைநீர் வடிகால் வாய்க்காலை சீர்படுத்தவும், கண்மாய்களுக்குச் செல்லும் கால்வாய்களை சுத்தப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
ஆனால் மாநகராட்சியினர் திருநகர் 6 ஆவது, 7 , 8 ஆவது பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மழைநீர் செல்லக்கூடிய வாய்க்காலை மட்டுமே சரிசெய்தனர். மற்ற இடங்களில் சீர் செய்யவில்லை. மேலும் கண்மாய்களுக்கு செல்லும் வாய்க்கால்களில் உள்ள குப்பை மற்றும் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படவில்லை. இத்தகைய காரணங்களால் இப்பகுதியில் தொடர்ந்து பலர் காய்ச்சலால் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் திருநகர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தெருப்பகுதியில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சிஅதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் தெருக்களில் சேரும் குப்பைகள் அள்ளப்படுவதில்லை. கொசுமருந்துகள் அடிப்பதில்லை எனக்கூறி அவர்களை முற்றுகையிட்டனர்.இதையடுத்து அதிகாரிகள் இனிவரும் காலங்களில் குப்பைகள் அள்ளப்படும், கொசு மருந்துகள் அடிக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து அப்பகுதியில் ஆய்வுசெய்த மாநகராட்சியினர் சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருந்த இரு வீட்டினருக்கு அபராதம் விதித்தனர்.