மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (மேற்கு), மண்டலம் 2 (வடக்கு) ஆகியவற்றில் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாநகராட்சியில் தினமும் முகநூல், தகவல் அழைப்பு மையம் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களின் குறைகள் பெறப்பட்டு அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மண்டல அலுவலகங்களில் வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தியும் மனுக்கள் பெறப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) காலை மண்டலம் 1 அலுவலகத்திலும், மாலையில் மண்டலம் 2 அலுவலகத்திலும் மனுக்களை மாநகராட்சி ஆணையர் நேரில் பெறுகிறார். பொதுமக்கள் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.