அனுப்பானடி, பனையூர் கால்வாய்களை நவ.15-க்குள் சுத்தப்படுத்தி அறிக்கைதாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
அனுப்பானடி மற்றும் பனையூர் கால்வாய்களை முழுவதுமாக சுத்தப்படுத்தி அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
அனுப்பானடி மற்றும் பனையூர் கால்வாய்களை முழுவதுமாக சுத்தப்படுத்தி அதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட அனுப்பானடி மற்றும் பனையூர் கால்வாய்களில் கழிவுகள் கொட்டப்படுவதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. அதன் அடிப்படையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரித்தது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இரு கால்வாய்களையும் இரண்டு வாரங்களில் சுத்தப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷா பானு அடங்கிய அமர்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகையில், நீதிமன்ற உத்தரவின்படி கால்வாய்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
பனையூர் கால்வாயில் 3.21 கிமீ, அனுப்பானடி கால்வாயில் 1.64 கிமீ நீளம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி, அதற்கான புகைப்படங்களைக் காண்பித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நவம்பர் 15 ஆம் தேதிக்குள் இரு கால்வாய்களையும் முழுவதுமாக சுத்தப்படுத்தி, அதுதொடர்பான அறிக்கையை புகைப்படங்களுடன் நவம்பர் 28 ஆம் தேதி மதுரை மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.