உசிலம்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி
உசிலம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளிகளில் 2016-17ஆம் ஆண்டு
உசிலம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளிகளில் 2016-17ஆம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி. நீதிபதி புதன்கிழமை வழங்கினார்.
உசிலம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் மல்லிகா வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் தமிழ்செல்வம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
என்.சி.சி.மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை எம்.எல்.ஏ. ஏற்றுக்கொண்டார். தலைமை ஆசிரியை அங்கயற்கண்ணி தலைமையில், மாவட்டக் கல்வி அலுவலர் எஸ். முருகேசன் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் பி. நீதிபதி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார். இதில் 235 மாணவர்கள் பயன் பெற்றனர்.
அதைத் தொடர்ந்து டி.இ.எல்.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கிரேஸ்சந்திரா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 320 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை எம்.எல்.ஏ. வழங்கினார்.
தொடர்ந்து நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள நூலகம், ஆங்கில ஆய்வகம் ஆகியவற்றை எம்.எல்.ஏ. திறந்துவைத்தார். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்து விஜயபாண்டியன் தலைமையில் 246 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியை சட்டப்பேரவை உறுப்பினர் வழங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் டி.ஆர். பால்பாண்டி, நகரச் செயலர் பூமா. ராஜா, மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.