காவிரி பிரச்னையில் ஜெயலலிதாவுக்கு மிரட்டல்கள் வந்தன: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்
காவிரி பிரச்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்ததாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசினார்.
காவிரி பிரச்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்ததாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசினார்.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை டி.எம். கோர்ட் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசியதாவது: ஆண்கள் மட்டுமே சாதிக்கக் கூடிய அரசியலில் தனி ஒரு பெண்ணாக சாதித்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில் அவரை இழிவாகப் பேசியும், அவர் பயணம் செய்த வாகனத்தின் மீது லாரியை விட்டு மோதி கொலை செய்யவும் முயற்சித்தனர். அதையெல்லாம் துணிவோடு சந்தித்தவர் ஜெயலலிதா.
காவிரி பிரச்னையில் ஜெயலலிதாவுக்கு எத்தனையோ மிரட்டல்கள் வந்தன. அப்போதும் கூட தனி நபராக நின்று பல சாதனைகளை புரிந்தார். பெண்களின் குறைகளை போக்க தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்கி, பாகிஸ்தான் நாடே பாராட்டும்படி செயல்பட்டார். அமைதிப் பூங்காவாக இருந்து வரும் தமிழகத்தில் ஏதாவது கலகத்தை ஏற்படுத்த திமுக சதி செய்கிறது என்றார்.
இக் கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.