வேலம்மாள் மருத்துவமனையில் உயிர் காக்கும் பயிற்சி முகாம்
வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி மற்றும் மேம்பட்ட இருதய உயிர் ஆதரவு பயிற்சி முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி மற்றும் மேம்பட்ட இருதய உயிர் ஆதரவு பயிற்சி முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியை, வேலம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் தொடக்கி வைத்தார்.
இதில், கருத்தரங்குகள் மற்றும் செயல்முறை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சியின்போது, மனித மாதிரி ஒன்றுக்கு உயிர் காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்று பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எதிர்காலத்தில் அவர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஐசியூ பிரிவு பொறுப்பாளர் மருத்துவர் எஸ். விஜய் ஆனந்த், டீன் ஆர்.எம். ராஜாமுத்தையா, கண்காணிப்பாளர் எஸ். சோமசுந்தரம், மருத்துவ சேவைகளின் இயக்குநர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.