மதுரையில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட பெண் காவலரை தாக்கிய இலங்கை அகதியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் ராணி (32). கூடல்புதூர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கூடல்நகர் ஆனையூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகதிகள் முகாமின் வாயிலில் ராணி ஞாயிற்றுக்கிழமை இரவு பணியில் இருந்தார்.
அப்போது அங்கு வசிக்கும் தேவகுமார் (45), கோனேஷ்வரன் ஆகிய இருவரும் முகாம் வாயிலில் பொது இடத்தில் மது அருந்தினர். இதை ராணி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் ராணியை தகாத வார்த்தைகளால் திட்டி அவரைத் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து ராணி அளித்த புகாரின்பேரில் கூடல்புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து தேவகுமாரை கைது செய்தனர். தலைமறைவான கோனேஷ்வரனை தேடி வருகின்றனர்.