மதுரையில் பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் 27 பவுன் நகை அடங்கிய பையை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ்(75). இவரது மனைவி மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக கரிமேடு பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு பால்ராஜ் திங்கள்கிழமை வந்துள்ளார். பின்னர் மனைவி அணிந்திருந்த 27 பவுன் நகை மற்றும் தன்னிடம் இருந்த ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை பையில் வைத்துக்கொண்டு கரிமேடு பகுதியில் இருந்து பேருந்தில் ஏறியுள்ளார்.
பேருந்தில் ஏறிய சிறிது நேரத்தில் அவர் வைத்திருந்த பை திருடுபோனது தெரியவந்தது. இதுதொடர்பாக பால்ராஜ் அளித்தப் புகாரின் பேரில் கரிமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.