பாரம்பரிய வேளாண் பயிர்கள் நட திருப்பரங்குன்றத்தில் கிராமங்கள் தேர்வு
திருப்பரங்குன்றம் வட்டார பகுதிகளில் மத்திய அரசின் பாரம்பரிய வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை பயிர்கள் பயிரிட கிராமங்கள்
திருப்பரங்குன்றம் வட்டார பகுதிகளில் மத்திய அரசின் பாரம்பரிய வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை பயிர்கள் பயிரிட கிராமங்கள் தேர்வுப்பணி நடைபெற்று வருவதாக வேளாண்மை உதவி இயக்குநர் பி.எஸ்.சர்புதின் அகமது தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் இயற்கை பாரம்பரிய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2018 - 19 ஆம் ஆண்டில் பாரம்பரிய வேளாண்மை பயிர்கள் பயிரிட திருப்பரங்குன்றம் பகுதியில் கிராமங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்மூலம் சுமார் 400 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் நிலங்களில் மாப்பிள்ளை சம்பா, கட்ட கருப்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள், சோளம், கம்பு உள்ளிட்டவைகளும் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படும். மேலும் இதற்கான இடுபொருள்கள், விதை, இயற்கை உரம், உயிர் உரங்கள், தாவர பூச்சிக்கொல்லி மருந்து ஆகியவை மானிய விலையில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புள்ளது. அவற்றை வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் சந்தைப்படுத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.