பைக் விபத்தில் இளைஞர் சாவு
திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே இருசக்கர வாகனம் சாலையோர தடுப்பில் மோதிய விபத்தில் இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே இருசக்கர வாகனம் சாலையோர தடுப்பில் மோதிய விபத்தில் இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
பெருங்குடியை அடுத்த சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் அழகுமுருகன்(28). இவர் கள்ளிக்குடி அடுத்த மருதங்குடியில் உள்ள உறவினர் இல்ல சுப நிகழ்ச்சியில் பங்கேற்க இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
மருதங்குடியை அடுத்த திருமால்புரம் பிரிவுச்சாலையில் வந்தபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அழகுமுருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ரயில் மோதி இளைஞர் சாவு
திருப்பரங்குன்றம், ஜூன் 4: திருப்பரங்குன்றத்தில் திங்கள்கிழமை அதிகாலை ரயில் மோதி இளைஞர் இறந்தது குறித்து ரயில்வே போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல்நிலையம் எதிரே உள்ள ரயில் தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவர் நீலநிறத்தில் பேன்ட் மற்றும் சிவப்பு நிறத்தில் கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜா கொடுத்த புகாரின்பேரில், ரயில்வே போலீஸார் இறந்தவர் யார், அவர் தண்டவாளத்தைக் கடந்தபோது ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் ரயில் முன் பாய்ந்து இறந்தாரா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.