குரங்கணி மலைப்பகுதி காட்டுத்தீயில் சிக்கி காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் தீயில் சிக்கியவர்களில் 15 பேர் சிகிச்சைக்காக மதுரை கொண்டு வரப்பட்டனர். இவர்களில் 9 பேர் அரசு ராஜாஜி மருத்துவமனையிலும், 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் மதுரை மாவட்ட செயலர் அழகர் மற்றும் கட்சியினர் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்தனர். இங்கு சிகிச்சை பெறுபவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அப்போது கட்சி நிர்வாகிகளின் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்ட கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சிகிச்சை பெறுபவர்களின் பெற்றோர் சிலரிடம் பேசி ஆறுதல் கூறினார்.