எய்ம்ஸ்: தென் மாவட்ட எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ய வலியுறுத்தல்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
எய்ம்ஸ் விவகாரத்தில் மதுரையைத் தவிர்க்கும் நோக்கிலேயே தமிழக அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலும் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மதுரை தோப்பூரில் உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் செல்வதைப் பிரதான காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தியன் ஆயில் நிறுவனம் மேற்படி இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எவ்வித ஆட்சேபனையும் இல்லையெனத் தெரிவித்துள்ளது.
அண்மையில் முதல்வர் தெரிவித்த கருத்துகள் தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் மக்கள் இயக்கம் சார்பில் நேரில் சந்தித்துப் பேசியபோது, முதல்வர் கூறிய கருத்து தவறாக வெளியாகியுள்ளது எனத் தெரிவித்தார்.
தென்மாவட்டங்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்கக் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனைத்துக் கட்சியினரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாத நிலையில், தென்மாவட்டங்களைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க சாதகமாக இருக்கும் நிலையில், தமிழக அரசின் நிலைப்பாடு வருத்தம் அளிப்பதாக உள்ளது. ஆகவே, மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் ஏப்ரல் 7 ஆம் தேதி மதுரை பழங்காநத்தம் பகுதியில் தர்னா போராட்டம் நடத்த உள்ளோம் என்றார். மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கத் தலைவர் கே.பி.முருகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.