நிதி நிறுவனம் நடத்தி ரூ.1.50 கோடி மோசடி: 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடமிருந்து வசூலித்த ரூ.1.50 கோடியை மோசடி செய்த வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தவரை, சிபிசிஐடி போலீஸார்
மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடமிருந்து வசூலித்த ரூ.1.50 கோடியை மோசடி செய்த வழக்கில் 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தவரை, சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ராஜஸ்தானை சேர்ந்தவர் மகேந்திர ஜெயின் (40). இவர், கடந்த 2015-இல் மதுரையில் வீட்டு உபயோகப் பொருள்களை மாதாந்திர தவணை முறையில் விற்பனை செய்யும் நிறுவனத்தை தொடங்கி, விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளில் விற்பனை செய்து வந்தார். அப்போது, பொதுமக்களிடையே ஏற்பட்ட அறிமுகத்தை பயன்படுத்தி, நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து நிதி நிறுவனம் தொடங்கினார்.
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாகக் கூறியதை அடுத்து மதுரை, விருதுநகர், ராஜபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை முதலீடு செய்தனர்.
இதன்மூலம், ரூ.1.50 கோடி வசூலான நிலையில், பொதுமக்களுக்கு வட்டித் தொகை தருவதில் இழுபறி ஏற்பட்டது. அதையடுத்து, வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதால், நிதி நிறுவனம் மூடப்பட்டது. நிறுவனத்தை நடத்திய மகேந்திர ஜெயின் உள்பட 6 பேரும் தலைமறைவாகினர்.
இது தொடர்பாக முதலீடு செய்தவர்கள் அளித்த புகாரின்பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதன்பின்னர், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதையடுத்து, நிறுவனத்தை நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த பணத்தை மகேந்திர ஜெயின் மோசடி செய்ததாகத் தெரிவித்தனர்.
சிபிசிஐடி போலீஸார் மகேந்திர ஜெயினை தேடி வந்தனர். ஆனால், அவர் தொடர்ந்து 3 ஆண்டுகளாக போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு மகேந்திர ஜெயின் வந்திருப்பதாக சிபிசிஐடி போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிபிசிஐடி டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று மகேந்திர ஜெயினை கைதுசெய்தனர்.