உசிலம்பட்டியில் காற்றுடன் மழை: மரங்கள் சாய்ந்தன
உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ததால், 2 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.
உசிலம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ததால், 2 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது.
உசிலம்பட்டி பகுதியில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 4 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து, 6 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், உசிலம்பட்டி கிழப்புதூரில் கொடிக்காய் மரமும், கொங்கப்பட்டியில் புளிய மரமும் மதுரை பிரதான சாலையின் குறுக்கே விழுந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உசிலம்பட்டி தீயணைப்புப் படையினரும், உசிலம்பட்டி காவல் துறையினரும் சேர்ந்து மரங்களை அகற்றினர். இதனால், அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீண்ட நாள்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால், உசிலம்பட்டி பகுதியில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.