புதிய அரசுப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளதா?: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் புதிய அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் புதிய அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி 515 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
மேலும் இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் கூடுதலாக 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், அதற்காக ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது புதிதாக பயன்பாட்டுக்கு வந்துள்ள அரசுப் பேருந்துகள், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் இல்லை. படிகள் உயரத்தில் இருப்பதோடு, அதற்கான கைப்பிடிகள் கதவுகளோடு இணைக்கப்பட்டிருப்பதால் அதைப் பிடித்து பேருந்துக்குள் ஏறுவது சிரமமாக உள்ளது.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
எனவே, தமிழகத்தில் புதிதாக கொண்டுவரப்பட உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல் தனியார் பேருந்துகளுக்கு உரிமம் வழங்குவதற்கு முன்பு அவை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் டிச.3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.