முகப்பு
மதுரை

தாமிரவருணியை காப்பதற்காக போராட்டம்: தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணியை காக்கும் வகையில் தனியார் ஆலைக்கு எதிராக தமிழக

Updated On : 8 அக்டோபர் 2018, 7:56 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணியை காக்கும் வகையில் தனியார் ஆலைக்கு எதிராக தமிழக ஆறுகள் மீட்பு இயக்கம் சார்பில் வரும் 2019 ஜனவரி 30 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படவுள்ளது என இயக்கத்தலைவர் த.குருசாமி தெரிவித்தார். 
தமிழக ஆறுகள் மீட்பு இயக்கத்தின் முன்னோடி அமைப்பான உணவுத் தகவல் உரிமை அமைப்பின் (ஃபியான்) 30 ஆம் ஆண்டு விழா மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் மற்றும் புதுதில்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைப்பின் தலைவர் டி.குருசாமி கூறியதாவது:  கடந்த 1989 ஆம் ஆண்டு ஃபியான் அமைப்பு  மதுரையில்  தொடங்கப்பட்டது. அதன்படியே ஆறுகள் மீட்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு அது பொதுமக்கள் பங்களிப்புடன் நடந்து வருகிறது. 
 தமிழக ஆறுகளை மீட்டு, அதன்படி மக்களின் பொருளாதார, பாரம்பரியத்தை காப்பதே அமைப்பின் நோக்கமாகும். அதனடிப்படையிலே பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறோம். ஆறுகள் மீட்பு பாதயாத்திரை கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. அதன்படி மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியர்களைக் கொண்ட மக்களவைக் குழு அமைக்கப்பட்டு ஆறுகள் கண்காணிக்கப்பட்டு பராமரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கிராம அளவிலும் நீர் நிலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் வைகை ஆற்றைக் காக்கும் வகையிலும் ஆட்சியர் தலைமையில் சிறப்புக்குழு அமைத்துள்ளோம். பொலிவுறு நகர்த்திட்டத்தில் வைகை ஆறு பாதுகாப்பு குறித்த எங்கள் ஆலோசனை ஏற்கப்படவுள்ளது. சீமைக்கருவேல மரப் பிரச்னையானது சமூகம் சார்ந்தது. ஆகவே அரசு கருவேல மரங்களை அகற்ற நினைத்தாலும், அதை பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படுத்துவதும் அவசியமாகிறது. கருவேல மரம் அகற்றுவது தொடர்பாக நீதிமன்ற வழக்குகளும் உள்ளன. மீத்தேன் வாயு எடுக்கும் பிரச்னையானது இந்தியாவின் பாரம்பரியமான உணவு உற்பத்தியை பாதிக்கும் வகையில் உள்ளது.  தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மீத்தேன் திட்டம் செயல்படுத்துவதை அரசு கைவிடவேண்டும். வரும் 2019 ஜனவரி 30 ஆம் தேதி ஆறுகள் மீட்பு இயக்கம் சார்பில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் தாமிரவருணியில் இருந்து தனியார் ஆலைக்கு தண்ணீர் செல்வதை தடுக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் குஜராத்தைச் சேர்ந்த காந்தியவாதி ஹகன்சேத்தி முன்னிலை வகித்தார். புதுதில்லியைச் சேர்ந்த சுமன், சஞ்சய்ராய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.