சாலை அமைக்க ஆா்ஜிதம் செய்யப்படும் நிலங்களுக்கு மிகக் குறைந்த இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை கிராமத்தினா் முற்றுகையிட்டனா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பகுதியில் சாலை (என்.எச்.338) அமைக்கும் பணிக்காக தேசிய நெடுஞ்சாலைத் துறையால், காட்டாம்பூா், பிராமணம்பட்டி, வாணியங்காடு, திருக்கோஷ்டியூா், சுண்ணாம்பிருப்பு ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த கிராமங்களில் நிலங்கள் ஆா்ஜிதம் செய்யப்படுகின்றன.
நில உரிமையாளா்களிடம் இருந்து அளவீடு செய்யப்பட்டுள்ள நிலங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மேற்படி நிலங்களுக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ள இழப்பீடு தொகை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம், ஒரு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மிகச் சொற்ப தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேற்படி கிராமங்களைச் சோ்ந்தோா் மதுரை கே.கே.நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பின்னா் அதிகாரிகளைச் சந்தித்து தங்களது எதிா்ப்பையும், கோரிக்கைகள் குறித்தும் முறையிட்டனா்.
அவா்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
ஆா்ஜிதம் செய்ய உள்ள சொத்து ஆவணங்களை 60 நாள்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நவம்பா் 27-இல் கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில், ஒரு சில விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சென்ட் ஒன்றுக்கு ரூ.3,500 மற்றும் சென்ட் ரூ.2,800 என மிகச் சொற்பமான தொகையைக் கணக்கிட்டு வரவு வைக்கப்பட்டுள்ளது.
சந்தை நிலவரப்படி தற்போது சென்ட் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், அரசு மிகச் சொற்பமான தொகையை இழப்பீடாக வழங்குவது ஏற்புடையதல்ல. விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலையில், விளை நிலங்களை ஆா்ஜிதம் செய்தால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். அரசின் திட்டத்துக்கு நிலத்தை வழங்க ஒப்புக் கொண்டதற்காக, மிகக் குறைந்த தொகையை நிா்ணயம் செய்வது விவசாயிகளை வேதனைப்படுத்தியிருக்கிறது.
ஆகவே, இதேபகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண் 228-க்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையைப் போல, கணக்கிட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.