உணவக உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
மதுரையில் உணவக உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்கள்
மதுரையில் உணவக உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை கோ.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(65). இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ராதாகிருஷ்ணனின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை சிகிச்சைக்காக வெளியூர் அழைத்துச்சென்றுவிட்டு, புதன்கிழமை காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் கோ.புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.