தமிழகமெங்கும் இருக்கும் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருநகரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநகர் 2 ஆவது பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி செயலர் உசிலை சிவா தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலர் மு.மணிமாறன், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் பா.சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமான பெண்கள் காலிகுடங்களுடன் பங்கேற்றனர்.
முன்னதாக, ஹார்விபட்டியில் இருந்து மிதிவண்டியில் காலிக் குடங்களுடன் திமுகவினர் பேரணியாக வந்தனர்.
திருநகர் பேரூராட்சி முன்னாள் தலைவர் கி.இந்திராகாந்தி, ஒன்றியச் செயலர்கள் பெரியசாமி, தனபால், பகுதி செயலர் கிருஷ்ணபாண்டியன், ஈஸ்வரன், வட்ட செயலர்கள் ஆறுமுகம், சுந்தர், சாமிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.