திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனிப் பெருவிழாவின் 6 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சைவ சமய ஸ்தாபித லீலை நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. விழாவினையொட்டி சுவாமி தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், பூத வாகனம், அன்னவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருளிபாலிக்கிறார்.
விழாவின் 6 ஆம் நாளான ஞாயிறுக்கிழமை சைவ சமய ஸ்தாபித லீலை நடைபெற்றது. இதையொட்டி மாலையில் பிரியாவிடையுடன் சத்தியகிரீஸ்வரர் பெரியரிஷப வாகனத்திலும், கோவர்தனாம்பிகை அம்மன் சிறியரிஷப வாகனத்திலும், சுப்பிரமணிய சுவாமி தெய்வானை தங்கமயில் வாகனத்திலும், விநாயகர், சண்டிகேஸ்வரர் பல்லக்கிலும் கோயிலில் இருந்து சிறப்பு தீப, தூப ஆராதனைகளோடு 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்கு கோயில் ஓதுவார் சைவ சமய ஸ்பித லீலை குறித்து பக்தர்களுக்கு கூறினார். பின்பு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று சுவாமிகள் வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 20 ஆம் தேதி பங்குனி உத்திரமும், 22 ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேமும், 23 ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு திருக்கல்யாணமும், 24 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.