திருப்பரங்குன்றத்தை அடுத்த தனத்தன்குளம், தோப்பூர் பகுதிகளில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ புதன்கிழமை திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தனக்கன்குளம் பிஆர்சி காலனியில் அவர் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திமுக வேட்பாளர் மதுரை வடக்கு தொகுதியைச் சேர்ந்தவர். அவருக்கு திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் தேவைகள் தெரியாது. அவர் பல கட்சிகளுக்கு தாவியவர். அதிமுகவில் சாதாரண தொண்டனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு வேட்பாளர் எஸ்.முனியாண்டி மற்றொரு உதாரணம்.
திருப்பரங்குன்றம் பகுதியில் துணைக்கோள் நகரம், பஸ் போர்ட், எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும் குடிமராமத்து, தாலிக்கு தங்கம், மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டு வந்தது அதிமுக அரசு என்றார். அவருடன் நிர்வாகிகள் கே.மாயி, முன்னாள் மேயர் திரவியம் உள்ளிட்ட பலர் இருந்தனர்.