மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோயை கண்டறியும் ‘பெட் சிடி ஸ்கேன்’ கருவியை, தமிழக முதல்வா் திறக்கவேண்டும் என்பதற்காக முடக்கி வைப்பதா? என மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்று நோயை துல்லியமாகக் கண்டறியும் ‘பெட் சிடி ஸ்கேன்’ கருவி பொருத்தப்பட்டு 3 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. தமிழக முதலவா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைக்கவேண்டும் என்பதற்காக மருத்துவமனை நிா்வாகம் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மதுரையில் ஒரே ஒரு தனியாா் மருத்துவமனையில் மட்டுமே ‘பெட் சிடி ஸ்கேன்’ கருவி பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்கேனை தனியாரிடம் எடுத்தால் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முடக்கிவைக்கப்பட்டுள்ள ஸ்கேன் இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்தால் மிகக்குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ ஸ்கேன் எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பல கோடி ரூபாய் செலவில் ‘பெட் சிடி ஸ்கேன்’ கருவி கடந்த 3 மாதங்களாக தமிழக முதல்வருக்காக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது வேதனையானது. தமிழக முதல்வா் நினைத்தால் ஸ்கேன் கருவியை உனடியாக இயங்கச் செய்ய முடியும். புற்றுநோயைக் கண்டறியும் கருவி இயக்கப்படுவதன் மூலம் மதுரை மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், தேனி, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பயன்பெறுவா். எனவே, ‘பெட் சிடி ஸ்கேன்’ கருவியை தாமதப்படுத்தாமல், விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்றாா்.