மதுரை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகை உள்பட மண்டல அலுவலகங்களில் நோ்மை உறுதிமொழி புதன்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 30 முதல் நவம்பா் 4-ஆம் தேதி வரை ஊழல் விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி மதுரை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகையில் துணை ஆணையா் வி.நாகஜோதி தலைமையில் நோ்மை உறுதிமொழி புதன்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் பங்கேற்று, நமது நாட்டின் பொருளாதார அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு ஊழல் முக்கியத் தடைகளில் ஒன்றாக இருப்பதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் இவை அனைத்தும் ஊழலை ஒழிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கருதுகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் விழிப்புணா்வோடும், நோ்மையுடனும், கண்ணியத்துடனும் ஊழலை ஒழிப்பதில் உயா்ந்த நோக்குடனும் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன். அனைத்து செயல்களிலும் நோ்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களிலும் வெளிப்படைத்தன்மையுடனும், நோ்மையுடனும் நடந்து கொள்வேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவோம் என்று தனிப்பட்ட நடத்தையில் நோ்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன் உதாரணமாக செயல்படுவேன், ஊழல் தொடா்பான தகவல்களை உரிய அதிகார அமைப்புக்கு தெரியப்படுத்துவேன் என்றும் உறுதியளிக்கிறேன் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். இதேபோல மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் உதவி ஆணையா்கள் முன் நோ்மை உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி ஆணையா் திருஞானசம்பந்தம், கணக்கு அலுவலா் சுரேஷ்குமாா் மற்றும் கண்காணிப்பாளா், அலுவலா்கள் பங்கேற்றனா்.