விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளதாக மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையம் ஆகியவற்றின் சார்பில் சனிக்கிழமை (செப்.14) விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள இந்து நாடார் விக்டோரியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமை தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையையும் வழங்குகிறார்.
இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி., பட்டயம், பொறியியல் பட்டதாரிகள், செவிலியர்
பட்டதாரிகளை தேர்வு செய்ய உள்ளனர்.
எனவே வேலைநாடுநர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம். வேலைநாடுநர்கள் தங்களின் சுய விவரங்களை www.ncs.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக உள்ளீடு செய்து இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான நிறுவனங்களின் பணிக்காலியிட விவரங்கள், தொழில் நெறிவழிகாட்டி மையங்கள், இலவச திறன்
பயிற்சி மையங்கள் மற்றும் தொழில் ஆலோசகர் போன்ற விவரங்களை எளிதில் பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்புக்கிளை அலுவலகம் தெரிவித்துள்ளது.