மதுரையில் நடைபெற்ற ரயில்வே பாதுகாப்புப்படை தொடக்கநாள் விழாவில், காவல் ஆய்வாளர் உள்பட 12 பேருக்கு சிறப்பாகப் பணிபுரிந்ததற்கான விருதுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
மதுரை ரயில்வே காலனியில் உள்ள செம்மண் மைதானத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அணிவகுப்பு நடைபெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு பாதுகாப்புப்படை வீரர்கள் ரத்ததானம் அளித்தனர். அவர்களுக்கு தியானப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. முன்னதாக, ரயில் பயணிகளிடம் நகைகளைத் திருடிவிட்டு, பிகார், மேற்குவங்காள மாநிலங்களுக்குத் தப்பிச் சென்ற திருடர்களை, ரயில்வே பாதுகாப்புப்படை காவல் ஆய்வாளர் முகேஷ்குமார் தலைமையிலான 12 பேர் கொண்ட தனிப்படையினர் குற்றவாளிகளைக் கைது செய்து, 61 பவுன் நகைகளை மீட்டனர்.
இதனைப் பாராட்டி ரயில்வே பாதுகாப்புப்படை தலைமை இயக்குநர் அருண்குமார், சான்றிதழ் வழங்கினார்.
அதனடிப்படையில் தனிப்படையில் இருந்த காவல் ஆய்வாளர் முகேஷ்குமார் உள்ளிட்ட 12 பேருக்கு சிறப்பாகப் பணிபுரிந்ததற்கான விருதுகளை, மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்புப்படை ஆணையர் ஜெகநாதன் வழங்கினார்.