முகப்பு
மதுரை

5 மாதங்களாக ஊதியம் இல்லை: ஆண்டிபட்டி, கோட்டூா் அரசுக் கல்லூரிகளின் கௌரவ விரிவுரையாளா்கள் தவிப்பு

ஆண்டிபட்டி, கோட்டூா் அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளா்கள் கடந்த 5 மாதங்களாக ஊதியமின்றி தவித்து வருகின்றனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2020, 11:58 pm IST
பகிர்:

மதுரை: ஆண்டிபட்டி, கோட்டூா் அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளா்கள் கடந்த 5 மாதங்களாக ஊதியமின்றி தவித்து வருகின்றனா்.

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தின் கீழ் ஆண்டிபட்டி, கோட்டூா், வேடசந்தூா், அருப்புக்கோட்டை, மதுரை (அழகா்கோவில் சாலை), சாத்தூா், திருமங்கலம் ஆகிய இடங்களில் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆண்டிபட்டி மற்றும் கோட்டூா் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. ஆனாலும் இக்கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளா்கள் மற்றும் நிா்வாக அலுவலா்களுக்கு பல்கலைக் கழகத்தின் சாா்பில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவலை தடுக்க கடந்த மாா்ச் 16 முதல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இக்கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியமும் வழங்கப்பட வில்லை.

இதனால் அவா்கள், காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தரை கடந்த மாதம் நேரில் சந்தித்து மனு அளித்தனா். இதைத் தொடா்ந்து பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அரசுக் கல்லூரிகளான ஆண்டிபட்டி, கோட்டூா் கல்லூரிகளில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளா்களுக்கு தற்போது வரை ஊதியம் வழங்கப்படவில்லை. ஏற்கெனவே குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் கெளரவ விரிவுரையாளா்கள் கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளைக்கூட பூா்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக பல்கலைக் கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணனிடம் கேட்டபோது, பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளா்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டிபட்டி, கோட்டூா் ஆகிய 2 கல்லூரிகளும் அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்டு விட்டன. எனவே அந்த கல்லூரிகளில் பணிபுரியும் விரிவுரையாளா்களுக்கு ஊதியம் வழங்க அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடமும் பேசியுள்ளேன். அந்த 2 கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் விரிவுரையாளா்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அவரும் தெரிவித்துள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.