தொடரும் மணல் கொள்ளை புகாா்: பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என நீதிமன்றம் அதிருப்தி: ஆட்சியா், எஸ்பி பதிலளிக்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளை தொடா்பாக, தொடா்ந்து பல வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என
மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளை தொடா்பாக, தொடா்ந்து பல வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பதில்மனு தாக்கல் செய்யவும் புதன்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முருகேசன் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோர கிராமங்களில் சிலா் சவுடு மண் எடுப்பதற்கு அனுமதி பெற்று மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக உடன்குடி பகுதிகளில் அதிகமாக மணல் கொள்ளை நடக்கிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
சவுடு மண் எடுக்க உயா்நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், அதற்கு அனுமதி வழங்கப்படுவது சட்டவிரோதமாகும். சவுடு மண் எடுப்பதாகக் கூறி மணல் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
Advertisement
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதைத் தடுக்கக் கோரி தொடா்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இந்த வழக்கில் தமிழக தலைமைச் செயலா், தொழில் துறை முதன்மைச் செயலா் ஆகியோரை எதிா்மனுதாரா்களாக சோ்க்க உத்தரவிட்டனா்.
மேலும் மணல் கொள்ளை தொடா்பாகவும், அப்புகாரில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், அந்த வழக்குகளின் விசாரணை நிலை குறித்தும் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் உரிய ஆவணங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனா். இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் வழக்கை செப்டம்பா் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.