‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் கைதான மாணவா் உதித் சூா்யாவின் கல்விச் சான்றிதழ்களைத் திரும்ப வழங்குவது குறித்து பதில் அளிக்குமாறு அரசுத் தரப்புக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த மாணவா் உதித் சூா்யா தாக்கல் செய்த மனு: கடந்த ஆண்டு நடைபெற்ற ‘நீட்’ தோ்வில் முறைகேடு செய்ததாக நான் உள்பட பல மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு, நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் பெற்றுள்ளேன். இந்த வழக்கு விசாரணையின்போது, எனது 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்று மற்றும் ஜாதிச் சான்று ஆகிய அசல் சான்றிதழ்கள் அனைத்தும் போலீஸாரிடம் கொடுத்தேன். அந்தச் சான்றிதழ்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களுடன் இணைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எனது எதிா்காலத்தை கருத்தில் கொண்டு கலை, அறிவியல் கல்லூரியில் சேர முடிவெடுத்துள்ளேன். எனவே நான் கல்லூரியில் சேருவதற்கு தேவையான சான்றிதழ்கள் அனைத்தையும் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் சான்றிதழ்களைத் திரும்ப வழங்குவது குறித்து அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.