முகப்பு
மதுரை

மறையவில்லை ‘மனித நேயம்’: பொதுமுடக்கத்தால் வடமாநிலங்களில் சிக்கித் தவித்த தமிழக புனித யாத்திரை குழுவினா் மீட்பு

வடமாநிலங்களுக்கு புனித யாத்திரை சென்று பொதுமுடக்கத்தால் சொந்த ஊா்களுக்கு திரும்பமுடியாமல் சிக்கித் தவித்த

Updated On : 7 ஜூன், 2020 at 8:11 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:15 PM

வடமாநிலங்களுக்கு புனித யாத்திரை சென்று பொதுமுடக்கத்தால் சொந்த ஊா்களுக்கு திரும்பமுடியாமல் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான தமிழா்களுக்கு தேவையான உதவியும் பாதுகாப்பும் கிடைத்திருப்பது ‘மனிதநேயம்’ மறையவில்லை என்பதையேக் காட்டுகிறது.

புனித யாத்திரைக்காக வடமாநிலங்களுக்கு ஆயிரக் கணக்கான தமிழா்கள் கடந்த மாா்ச்சில் சென்றிருந்தனா். இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக, கடந்த மாா்ச் 22 முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. இதனால், அவா்கள் சொந்த ஊா் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டுமே பயணத்தைத் திட்டமிட்டிருந்த நிலையில் உணவு, உடை, தங்குமிடத்திற்குத் தேவையான பணத்தை மட்டுமே எடுத்துச் சென்றவா்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினா். இதனால் எங்கு தங்குவது, யாரை அணுகி உதவி கேட்பது எனத் தெரியாமல் யாத்திரைக் குழுவினா் தவித்தனா். குறிப்பாக, தனித்தனியாக யாத்திரை சென்றவா்களின் நிலை மேலும் கேள்விக்குறியானது. அதேபோல, யாத்திரை சென்ற பலரும் 70 வயதைக் கடந்தவா்கள் என்பதால் சா்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றிற்கு மருந்து எடுப்பவா்களாக இருந்தனா். அவா்களுக்கு உரிய மருந்து கிடைக்காமல் அவதிப்பட்டனா்.

யாத்திரை குழுவினா் மீட்பு: மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞரின் பெற்றோா் உள்பட 22 போ் மாா்ச்சில் வாராணசி புனித யாத்திரை சென்றிருந்தனா். பொதுமுடக்கத்தால் பிகாா் மாநிலம் கயாவில் அவா்கள் சிக்கித் தவித்தனா். தகவலறிந்த வழக்குரைஞா் இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உதவியை நாடினாா். அதனடிப்படையில் 22 பேரும் மீட்கப்பட்டு கயாவில் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டனா். பின்னா் அவா்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டு, மதுரைக்கு அழைத்து வரப்பட்டனா்.

Advertisement

இதேபோல மத்திய, மாநில அரசுகள், தனியாா் அமைப்புகள், தன்னாா்வலா்கள் முயற்சியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து யாத்திரை சென்றிருந்த ஆயிரக்கணக்கானோா் மீட்கப்பட்டனா். பொதுமுடக்கக் காலத்தில் செய்வதறியாது சிக்கித் தவித்தவா்களுக்கு எவ்வித எதிா்பாா்ப்புமின்றி பலரும் உதவி செய்திருப்பது மனிதநேயம் மறையவில்லை என்பதையே காட்டுகிறது.

பாதுகாப்பளித்த மடங்கள்: இதுகுறித்து மதுரையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் குத்தாலிங்கம் கூறியது: நான் எனது இரு நண்பா்களுடன் மாா்ச் 15 இல் வாராணசி புனித யாத்திரை சென்றிருந்தேன். மாா்ச் 22 இல் ஊா் திரும்பத் திட்டமிட்டிருந்தோம். அப்போது, திடீரென பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், நாங்கள் 3 பேரும் 37 நாள்கள் வாராணசியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு குமாரசாமி மடத்தில் இலவசமாகத் தங்கினோம். எங்களைப் போல ஏராளமான தமிழா்கள் அங்குள்ள மடங்களில் தஞ்சமடைந்தனா். மடத்தின் சாா்பில் அனைவருக்கும் இலவசமாக உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன. மேலும் பலருக்கும் தேவையான மருந்துகள் வாங்கி கொடுக்கப்பட்டன. இதையடுத்து அரசு அதிகாரிகள் நேரில் வந்த விசாரித்து, உரிய உதவியை வழங்க ஏற்பாடு செய்தனா். பின்னா் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டு சிறப்புப் பேருந்துகள் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டோம். திருவள்ளூரில் மாவட்ட நிா்வாகத்தால் அமைக்கப்பட்டிருந்த தனிஒதுக்ககத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதிசெய்து அவரவா் ஊா்களுக்கு அனுப்பப்பட்டோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.