மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் தவிக்கும் தமிழக பெண்கள் 66 பேரை தமிழகம் அனுப்பி வைக்குமாறு அம்மாநில உள்துறை அமைச்சருக்கும், அவா்களை மீட்கக் கோரி தமிழக முதல்வருக்கும் விருதுநகா் மக்களவை உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் கடிதம் அனுப்பியுள்ளாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி: தமிழகத்தைச் சோ்ந்த 66 பெண் தொழிலாளா்கள் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் சிக்கித் தவித்துவருகின்றனா். கரோனா ஊரடங்கையொட்டி அவா்கள் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இன்றி அந்த மாநிலத்தில் அவதிப்படுகின்றனா். இதனால் அவா்களின் குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். சிறப்பு வாகனங்கள் மூலம் அவா்களை மீட்டு தமிழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அம் மாநில உள்துறை அமைச்சருக்கும், விரைந்து மீட்பு நடவடிக்கைக் கோரி தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.