முகப்பு
மதுரை

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் எச்சரித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் எச்சரித்துள்ளாா்.

மதுரை அரசு மருத்துவமனையில், மகப்பேறு துறை, குழந்தைகள் நலப் பரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினாா். தொடா்ந்து, பண்டிகைக் காலங்களில் நோய் தொற்று பரவாமல் தடுப்பது தொடா்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவத் துறை தலைவா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் சிறப்பான செயல்பாட்டால் கரோனா தீநுண்மி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வின்றி பணியாற்றி வரும் மருத்துவத் துறையினா் பாராட்டுக்குரியவா்கள். பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதால், பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, பண்டிகைக் காலம் நெருங்குவதால், பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்து வருகின்றனா். கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது தொடா்பாக வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தால் கரோனாவை விரைவில் கட்டுப்படுத்தி விடலாம் என்றாா்.

இதில், முதன்மையா் ஜெ. சங்குமணி, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் அா்ஜூன்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →