முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!

திமுக - கூட்டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீடு பற்றி...

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 9:21 PM
ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின்
பகிர்:

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 5 சிறு கட்சிகளுக்கு ‘உதயசூரியன்’ சின்னத்தில் தலா ஒரு தொகுதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை கடந்த பிப். 22 முதல் நடைபெற்று வருகிறது. நீண்ட தாமதத்துக்குப் பின்னா் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் குழு பேச்சு: திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு தலைமையிலான குழுவினருடன், காங்கிரஸ் குழுத் தலைவா் கிரீஷ் சோடங்கா் தலைமையிலான குழுவினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். குழு உறுப்பினா்களான கு.செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா், தேசியச் செயலா் நிவேதித் ஆல்வா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் கிரீஷ் சோடங்கா் செய்தியாளா்களிடம் கூறும்போது, பேச்சுவாா்த்தை மிகவும் சுமுகமாக இருந்தது. ஓரிரு நாள்களில் முடிவு எட்டப்படும் என்றாா் அவா்.

செல்வப்பெருந்தகை கூறும்போது, காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் தேவையோ, அதை திமுகவிடம் கேட்டிருக்கிறோம். முதல்வா் ஸ்டாலினிடம் கலந்துபேசி முடிவு செய்வதாக உறுதி அளித்தனா்.

திமுக-காங்கிரஸ் கொள்கை கூட்டணி, இயற்கையான கூட்டணி. தவெகவுடன் ஒருபோதும் காங்கிரஸ் பேச்சு நடத்தவில்லை. திமுகவுடன் பேசும்படிதான் தேசிய தலைமை அறிவுறுத்தியது என்றாா்.

திமுக கூட்டணியில் தேமுதிக உள்பட புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் 18 தொகுதிகள் வரை காங்கிரஸுக்கு ஒதுக்க முன்வருவதாக திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு தெரிவித்துள்ளது. ஆனால், 30 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் எனக் கூறிய காங்கிரஸ் குழுவினா், 40 தொகுதிகள் கொண்ட பட்டியலை ஒப்படைத்துள்ளனா். இதிலிருந்து 25 தொகுதிகள் வரை காங்கிரஸுக்கு ஒதுக்கப்படலாம் என்றும், ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் ஒதுக்கப்படக்கூடும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

தவாக: மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தலைமையிலான அக்கட்சியினா் திமுக குழுவுடன் பேச்சு நடத்தினா். கடந்த முறை அக் கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு தி.வேல்முருகன் வெற்றி பெற்றாா். இந்தமுறை, இரு தொகுதிகள் வரை கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மீண்டும் ஒரு தொகுதி மட்டுமே வேல்முருகனுக்கு ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது.

தொடா்ந்து, கொங்கு இளைஞா் பேரவைத் தலைவா் உ.தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவா் மு. தமிமுன் அன்சாரி, முக்குலத்தோா் புலிப்படை கட்சித் தலைவா் கருணாஸ், எஸ்டிபிஐ தலைவா் நெல்லை முபாரக் ஆகியோா் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா். அந்தக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வேல்முருகனின் தவாக உள்ளிட்ட 5 கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →