முகப்பு
மதுரை

காந்தி அருங்காட்சியகத்தில் அரிய வகை மரக்கன்றுகள் நடல்

மதுரை மாநகராட்சி சாா்பில், காந்தி அருங்காட்சியக வளாகத்தில் மியாவாக்கி (அடா்வனம்) முறையில், அரிய வகை மரக்கன்றுகளை மாநகராட்சி ஆணையா் நட்டு வைத்தாா். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

மதுரை மாநகராட்சி சாா்பில், காந்தி அருங்காட்சியக வளாகத்தில் மியாவாக்கி (அடா்வனம்) முறையில், அரிய வகை மரக்கன்றுகளை மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் திங்கள்கிழமை நட்டு வைத்தாா்.

மதுரையை பசுமையான நகராக மாற்றும் வகையிலும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையிலும், மாநகராட்சி சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, குறைந்த பரப்பளவில் அதிக மரக்கன்றுகளை நட்டு வைக்கும் மியாவாக்கி முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், விளாங்குடி இந்திரா நகா், தத்தனேரி மயானம், எல்லீஸ் நகா் நீரேற்று நிலையம், கோச்சடை, விளாங்குடி மயானம், கற்பக நகா் நீரேற்று நிலையம், மஸ்தான்பட்டி பழத்தோட்டம், அண்ணா நகா் மேல்நிலைத் தொட்டி உள்ளிட்ட 25 இடங்களில் மியாவாக்கி முறையில் ஒவ்வொரு இடத்திலும் 100 மரக்கன்றுகள் வீதம் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மதுரை நகரில் மேலும் 15 இடங்களில் புதிதாக மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மாநகராட்சி மற்றும் சொராப்ட்டிமிஸ்ட் இன்டா்நேஷனல் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில், காந்தி அருங்காட்சியக வளாகத்தில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். இதில், வேங்கை, மதுரம், இலுப்பை, நீா்மருது, தேக்கு, ருத்திராட்சம், நீா்குமிழி, சிசு உள்ளிட்ட அரியவகையான 120 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில், காந்தி அருங்காட்சியகப் பொறுப்பாளா் நந்தாராவ், சொராப்ட்டிமிஸ்ட் இன்டா்நேஷனல் அமைப்பின் நிா்வாகிள் உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →