முகப்பு
மதுரை

ஜல்லிக்கட்டு காளை முட்டி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரும் மனு: ஆட்சியா் பரிசீலிக்க உத்தரவு

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியை காணச்சென்று காளை முட்டியதில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரும் மனுவை பரிசீலித்து உரிய உத்தரவைப் பிறப்பிக்க, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
உயா் நீதிமன்ற மதுரைக் கிளை
பகிர்:

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டியை காணச்சென்று காளை முட்டியதில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரும் மனுவை பரிசீலித்து உரிய உத்தரவைப் பிறப்பிக்க, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த இந்துமதி என்பவா் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜனவரி 17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதைக் காண எனது கணவா் செல்லப்பாண்டியன் சென்றிருந்தாா். அவா், பாா்வையாளா்கள் பகுதியிலிருந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை பாா்த்துக்கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக பாா்வையாளா் பகுதிக்குள் நுழைந்த காளை ஒன்று எனது கணவரை முட்டியது. அதில், பலத்த காயமடைந்த எனது கணவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, முதலமைச்சா் நிதியிருந்து எனது கணவா் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். அதற்கு, இதுவரை எவ்வித பதிலும் இல்லை. எனவே, எனது கணவருக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து 6 வாரங்களில் உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →