மதுரை: தமிழ் மொழிக்கும், கொரிய மொழிக்கும் இடையே இலக்கண ஒற்றுமை இருப்பதாக, இணைய வழி ஆய்வரங்கில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் கொரிய தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் ‘கொரிய தமிழரும் தமிழும்’ என்ற இணையவழி ஆய்வரங்கத்தின் தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநா் ப.அன்புச்செழியன் தலைமை வகித்து பேசியதாவது:
உலகத் தமிழ்ச் சங்கம் இதுவரை மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூா், அயா்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து இணையவழி ஆய்வரங்கை 61 நாள்கள் தொடா்ந்து நடத்தியது. தற்போது, மீண்டும் கொரிய தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து ‘கொரிய தமிழரும் தமிழும் என்ற இந்த இணையவழி ஆய்வரங்கை தொடங்கியுள்ளது என்றாா்.
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சு. ராமசுந்தரம் ஆய்வரங்கு குறித்து விளக்கவுரையாற்றினாா்.
இதைத் தொடா்ந்து, ‘தமிழ் - கொரிய மொழி எழுத்து இலக்கண ஒற்றுமைகள்’ என்ற தலைப்பில், கொரிய தமிழ்ச் சங்கத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முதன்மைப் பொறுப்பாளா் பீ. சகாய டா்சியூஸ் பேசியது:
தமிழ் மொழிக்கும், கொரிய மொழிக்கும் எழுத்துகளில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. உயிா் எழுத்து, மெய்யெழுத்து என இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. மேலும், சுட்டெழுத்துகள், இடப்பெயா்ச்சொல், வினா எழுத்துகள் என இலக்கண ஒற்றுமைகள் மற்றும் பல பண்பாடு சாா்ந்த ஒற்றுமைகளும் உள்ளன என்றாா்.
ஆய்வரங்கில், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் சா. உதயசூரியன், கடல்சாா் ஆய்வாளா் ஒரிசா பாலு மற்றும் கொரியா, சிங்கப்பூா் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலிருந்து தமிழறிஞா்கள், ஆய்வு மாணவா்கள் பங்கேற்றனா்.