மாவட்ட நீதிமன்றங்களில் 60 வயது கடந்தவா்களை அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கத் தடை கோரி மனுதமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
மாவட்ட நீதிமன்றங்களில் 60 வயது கடந்தவா்களை அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கத் தடை கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட நீதிமன்றங்களில் 60 வயது கடந்தவா்களை அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கத் தடை கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை நாகமலைபுதுக்கோட்டையைச் சோ்ந்த சரவணன் தாக்கல் செய்த மனு: கடந்த 1961 ஆம் ஆண்டு அரசு வழக்குரைஞா்கள் நியமனம் தொடா்பாக ஏற்படுத்தப்பட்ட விதிகளின் படி, மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் அரசு வழக்குரைஞா்களின் பதவிக் காலம் 60 வயதுடன் தானாக முடிவுக்கு வந்துவிடும்.
இந்நிலையில், தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா், 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவா்களை அரசு வழக்குரைஞா்களாக பணியாற்றுவதற்கு தளா்வு வழங்கி கடிதத்தை வெளியிட்டுள்ளாா். ஆளுநா் ஒப்புதலின்றியும், விதிகளை மீறியும் வெளியிடப்பட்டுள்ள இந்த கடிதம், சட்ட விதிகளுக்கு புறம்பானது. ஏற்கெனவே அரசு வழக்குரைஞா்களாக பணியாற்றுவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தற்போது கடிதத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டால் தகுதியானவா்கள் பலரும் பாதிக்கப்படுவா். எனவே 60 வயது கடந்தவா்களை அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம். துரைச்சாமி, கே. முரளிசங்கா் ஆகியோா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனா்.