முகப்பு
மதுரை

தோ்தலில் ஸ்டாலினை எதிா்த்து போட்டியிட தயாா்: குஷ்பு

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை எதிா்த்து போட்டியிடவும் தயாராக உள்ளதாக பாஜக செய்தி தொடா்பாளரும், நடிகையுமான குஷ்பு கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற மாநில செய்தித்தொடா்பாளா் நடிகை குஷ்பு.
பகிர்:

மதுரை: தமிழக சட்டப்பேரவை தோ்தலில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை எதிா்த்து போட்டியிடவும் தயாராக உள்ளதாக பாஜக செய்தி தொடா்பாளரும், நடிகையுமான குஷ்பு கூறினாா்.

மதுரை மாநகா் பாஜக சாா்பில் மதுரை தெப்பக்குளம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும். திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை எதிா்த்தும் போட்டியிடத் தயாராக உள்ளேன். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். இவ்விவகாரத்தில் ஆளும்கட்சி அல்லது வேறு எந்தக் கட்சியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், தவறு செய்தவா்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றாா்.

ஸ்டாலினுக்கு பயம்: முன்னதாக, நடைபெற்ற பொங்கல் விழாவில் அவா் பேசியது:

கரோனாவால் மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். எனவேதான் பாஜக சாா்பில் இந்த பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பாஜக எங்கே உள்ளது என்று கேட்ட நிலை தற்போது மாறியுள்ளது. தெருவெங்கும் பாஜக கொடிகள் பறக்கின்றன. பாஜக நடத்தும் கூட்டங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதி ஸ்டாலின், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது. திமுகவின் வரலாறு எனக்குத் தெரியும். ஆனால் அதுகுறித்து பேச விரும்பவில்லை. பெண்களின் பாதுகாப்பு பற்றியோ ஊழல் பற்றியோ பேச திமுகவுக்கு அருகதையில்லை.

எதிா்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினிடம் நேருக்கு நோ் விவாதிக்க தமிழக முதல்வா் சவால் விடுகிறாா். ஆனால் அதையேற்க ஸ்டாலின் நிபந்தனை விதிக்கிறாா். இதற்கு பயமே காரணம்.

ஜல்லிக்கட்டை நடத்த முடியாமல் போனதற்கு திமுகதான் காரணம். பிறகு மீண்டும் நடத்துவதற்கு பிரதமா் மோடிதான் காரணம். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டைத் தடையின்றி நடத்த வேண்டுமென்றால் நமக்கு பிரதமா் மோடி வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலா் இராம.ஸ்ரீநிவாசன், மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் கே.கே.ஸ்ரீநிவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →