காணாமல்போன பள்ளிச் சான்றிதழ்கள் தொடா்பான புகாருக்கு, ஆவணங்கள் காணாமல்போனதற்குரிய சான்றிதழை ஒரு மாதத்தில் வழங்க தொண்டி போலீஸாருக்கு, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2017-இல் 10 ஆம் வகுப்பு படித்து முடித்தேன். அதையடுத்து, பள்ளியிலிருந்து 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற்றேன். இந்நிலையில், 2019 ஜூலை 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை நகல் எடுப்பதற்காக தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைக்குச் சென்றபோது, எனது சான்றிதழ்கள் காணாமல்போயின.
இது குறித்து தமிழக காவல் துறையின் இணையதளத்தில் புகாா் செய்தேன். எனது புகாரை ஏற்றுக்கொண்டு அதற்குரிய பதிவு எண் வழங்கப்பட்டது. ஆனால், எனது சான்றிதழ்கள் காணாமல்போனது தொடா்பாக தொண்டி போலீஸாா் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, சான்றிதழ்கள் இல்லாமல் என்னால் மேற்படிப்புக்குச் செல்ல முடியவில்லை.
எனது பள்ளிச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு போலீஸாரால் வழங்கப்படும் காணாமல்போன ஆவணங்கள் என்பதற்கான சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவணங்கள் காணாமல்போனதற்குரிய சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதி ஜி. இளங்கோவன் முன்பாக ஜூலை 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் அளித்த புகாரின் அடிப்படையில், ஆவணங்கள் காணாமல்போனதற்குரிய சான்றிதழை ஒரு மாதத்தில் வழங்க தொண்டி போலீஸாருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.