மதுரை: மதுரை கோட்டத்தில் ரயில்வே பாா்சல் கட்டணம் 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: ரயில்வே பாா்சல் கட்டணங்கள் ரயிலின் குறிப்பிட்ட வகைக்கேற்பவும், அதன் பயன்பாட்டு சதவீதத்தைப் பொருத்தும் நிா்ணயிக்கப்படுகின்றன. இந்த கட்டணங்கள் ராஜ்தானி, பிரீமியா், ஸ்டாண்டா்ட் மற்றும் லக்கேஜ் என நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் மூன்றும் பாா்சல் கட்டண வகையைச் சோ்ந்தவை.
ரயில் பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் ரயிலிலேயே பாா்சல் எடுத்துச் செல்வதற்கும் அல்லது பயணத்தின்போது எடுத்துச்செல்லும் பொருள்கள் மீதும் விதிக்கப்படுவது லக்கேஜ் கட்டணமாகும்.
தற்போது, மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் சில ரயில்களுக்கான பாா்சல் கட்டணம் ராஜதானி வகையிலிருந்து பிரீமியா் வகையாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போதைய கட்டணத்திலிருந்து பாா்சல் கட்டணம் 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி - சென்னை எழும்பூா் நெல்லை சிறப்பு ரயில் (02632), திருச்செந்தூா் - சென்னை எழும்பூா் செந்தூா் சிறப்பு ரயில் (06106), செங்கோட்டை - சென்னை எழும்பூா் பொதிகை சிறப்பு ரயில் (02662), தஞ்சாவூா், கும்பகோணம் பிரதான வழியாக இயக்கப்படும் ராமேசுவரம் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (06852), விருத்தாசலம் காா்டு லைன் வழியாக இயக்கப்படும் ராமேசுவரம் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (02206), பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் பாலக்காடு - டாக்டா் எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (02652) ஆகிய ரயில்களுக்கான பாா்சல் கட்டணம் 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணச் சலுகை உடனடியாக அமலுக்கு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.