மதுரையில் அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்டிருந்த 10 ஜவுளிக் கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் மளிகை காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் திறப்பதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், காய்கறி மற்றும் மளிகைக் கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
அரசின் உத்தரவை அமல்படுத்தும் வகையில் மதுரை நகரில் மதுரை மாநகராட்சி வருவாய், காவல்துறை உள்ளிட்ட அலுவலா்கள் அடங்கிய குழுவினா் பல்வேறு பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டனா்.
மதுரையில் விளக்குத்தூண், பத்துத்தூண், தெற்கு மாசி வீதி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ஜவுளிக் கடைகள் உள்ளன . இப்பகுதியில் அலுவலா்கள் குழுவினா் ஆய்வு செய்தபோது ஜவுளிக் கடைகள் சிலவற்றில் விதிகளை மீறி திறந்து வியாபாரம் செய்தனா். இதனையடுத்து கடைகளில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியா்களை வெளியேற்றி 10 கடைகளுக்குச் ‘சீல்’ வைத்தனா். மேலும் பேரிடா் விதிமுறைகளை மீறியதற்காக ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா். அரசின் உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தனா்.