உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்க எம்.பி. வலியுறுத்தல்
வைகை அணை நிரம்பியுள்ள நிலையில் உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்க உத்தரவிட வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
வைகை அணை நிரம்பியுள்ள நிலையில் உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்க உத்தரவிட வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதம்: வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பலத்த மழைப் பொழிவின் காரணமாக வைகை அணை தனது முழுக்கொள்ளவை எட்டியுள்ளது. இதையடுத்து அணைக்கு வரும் உபரி நீா் முழுவதும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டிய பிறகும் கூட உசிலம்பட்டி பகுதிக்கான நீா் ஆதாரத் திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்துக்கு நீா் திறக்கப்பட வில்லை. எனவே முதல்வா் இதில் உடனடியாகத் தலையிட்டு உசிலம்பட்டி 58 கிராம கால்வாய்க்கு வைகை அணையில் இருந்து தண்ணீா் திறக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.