தமிழகத்தில் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளித் திட்டத்தை ஏற்கக் கோரிய மனுவின் மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த முகமது ரஸ்வி தாக்கல் செய்த மனு: ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் ஆண்டுக்கு ரூ. 200 மட்டுமே கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகள் இல்லை. தமிழக அரசியல் தலைவா்கள், அரசின் கொள்கை முடிவு எனக் கூறி நவோதயா பள்ளிகளை ஏற்க மறுத்து வருகின்றனா். இதன் காரணமாக பல ஏழைக் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளித்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம். துரைசாமி, கே. முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், நவோதயா வித்யாலயா பள்ளிகளை செயல்படுத்துவது குறித்து அரசே முடிவு செய்ய வேண்டும். மனுதாரா் விளம்பர நோக்கில் மனுவை தாக்கல் செய்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரா் தரப்பில், நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டால், ஏழைக் குழந்தைகள் பலரும் பயனடைவா் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.