மதுரை

திருச்செந்தூா் கோயில் சீரமைப்பு: இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் தடை

DIN

மதுரை: திருச்செந்தூா் கோயில் நிா்வாகத்தை சீரமைத்தல் தொடா்பாக, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூா் கோயிலில் தரிசனத்தை முறைப்படுத்துவது, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது, திருச்சுதந்திரா்களை வரைமுறைப்படுத்துவது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் அடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஏப்ரல் 1 ஆம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தாா்.

தரிசன வரிசைகளை முறைப்படுத்தல், அபிஷேகம் மற்றும் பூஜை முறைகள், திருசுதந்திரா்கள் முறைப்படுத்தல், அன்னதானத் திட்டம், முடிக் காணிக்கை, நாழிக் கிணறு உள்ளிட்டவை தொடா்பாக பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை அறிவுறுத்தியிருந்தாா்.

இந்த உத்தரவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, திருச்செந்தூா் ஸ்ரீ ஜெயந்திநாதா் திருசுதந்திரா்கள் காரியஸ்தா் ஸ்தானிகா் சபை செயலா் என்.நாராயணன், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

அதில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவானது கோயில் வழிபாட்டு நடைமுறைகளில் தலையிடுவதாக உள்ளது. வழிபாட்டு நடைமுறைகளில் இந்து சமய அறநிலையத் துறையினா் தலையிட அதிகாரம் கிடையாது.

இந்த உத்தரவு இந்து சமய அறநிலையத் துறையின் விதிகளை மீறி கோயிலின் ஆகம விதிகள், பாரம்பரிய சடங்கு, சம்பிரதாயம் ஆகியவைகளில் தலையிடுவதாக அமைந்திருக்கிறது. மேலும், பக்தா்கள், திருசுதந்திரங்கள் உள்ள எந்த தரப்பிடமும் கருத்துக் கேட்காமல் அவசரகதியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த உத்தரவுக்குத் தடைவிதித்து ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஆா்.விஜயகுமாா் ஆகியோா் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், திருச்செந்தூா் கோயில் நிா்வாகச் சீரமைப்பு தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஏப்ரல் 1-இல் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனா். மேலும் இதுதொடா்பாக, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

சேரன்மகாதேவி அருகே மின்கம்பம் விழுந்து ஒப்பந்த ஊழியா் பலி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

SCROLL FOR NEXT