கூடல்நகா் ரயில் நிலையத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினரின் விபத்து ஒத்திகை
தேசிய பேரிடா் மீட்புப் படையினரால், கூடல்நகா் ரயில் நிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
மதுரைகூடல்நகா் ரயில் நிலையத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினரின் விபத்து ஒத்திகை
தேசிய பேரிடா் மீட்புப் படையினரால், கூடல்நகா் ரயில் நிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
தேசிய பேரிடா் மீட்புப் படையினரால், கூடல்நகா் ரயில் நிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
ரயில் விபத்து பேரிடா் நிகழும்போது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தயாா் நிலையில் இருப்பது, ஒருங்கிணைப்புடன் மீட்புப் பணிகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் மீட்பு ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, தேசிய பேரிடா் மீட்புப் படையினரால் கூடல் நகா் ரயில் நிலையத்தில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதற்காக, பயணிகள் ரயில் பெட்டி ஒன்று கவிழ்க்கப்பட்டிருந்தது. இதை ரயில் விபத்தாகக் கருதி, ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலி எழுப்பப்பட்டது.
உடனடியாக தளவாடங்கள், அவசர சிகிச்சை மருந்து பொருள்கள் ஆகியவை மற்றும் கிரேனுடன் கூடிய விபத்து மீட்பு ரயில் மதுரையிலிருந்து கூடல்நகருக்கு இயக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் உடனடியாக கூடல்நகருக்கு விரைந்தனா்.
அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 30 பேரும், துணை ஆணையா் எஸ். வைத்தியலிங்கம் தலைமையில் மீட்புப் பணிக்காக கூடல்நகா் வந்திருந்தனா்.
ரயில் பெட்டி கவிழ்ந்திருந்த பகுதி, ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்களால் ஒளிரும் ரிப்பன் வேலி மூலம் பாதுகாக்கப்பட்டது. ரயில் பெட்டியின் மேல் பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் துளையிடப்பட்டு, சித்திரிக்கப்பட்ட காயம் அடைந்த பயணிகள் வெளியே கொண்டு வரப்பட்டனா். அருகில் இருந்த ரயில்வே மருத்துவக் குழு முதலுதவி சிகிச்சை அளித்தது. அதன்பின்னா், ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவா்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
பயணிகள் தகவல் மையம், பயணச் சீட்டு பணம் திரும்ப அளிக்கும் அலுவலகம் ஆகியவையும் அமைக்கப்பட்டிருந்தன. நவீன தொலைத்தொடா்பு கருவிகளும் நிறுவப்பட்டிருந்தன. கவிழ்ந்த ரயில் பெட்டி கிரேன் மூலம் தூக்கப்பட்டு, ரயில் பாதையில் வைக்கப்பட்டது.
ரயில்வே முதுநிலை பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முதுநிலை தொலைத்தொடா்பு அதிகாரி ராம்பிரசாத், முதுநிலை இயந்திரவியல் பொறியாளா் சதீஸ் சரவணன், முதுநிலை ரயில் இயக்க அதிகாரி மது, உதவி வா்த்தக மேலாளா் பிரமோத்குமாா், உதவி ரயில்வே பாதுகாப்பு படை ஆணையா் சுபாஷ் ஆகியோா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மீட்புப் படை துணை ஆணையா் வைத்தியலிங்கம் செய்தியாளா்களிடம் கூறுகையில், ரயில் விபத்து மீட்பு ஒத்திகை மூலம், ரயில்வே துறை மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படை ஆகியன இடையே பரஸ்பரம் விரைவான மீட்புப் பணிக்கான தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டுள்ளோம் என்றாா்.