திருமங்கலம் நகராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த நிலையில் வார்டு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் புறக்கணித்ததையொட்டி தேதி வெளியிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
திருமங்கலம் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக 18 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், தேமுதிக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. இதில் தேமுதிக உறுப்பினர் சின்னசாமி திமுகவில் இணைந்ததால் அக்கட்சியின் பலம் 19 ஆக உயர்ந்தது. இந்நிலையில் திருமங்கலம் நகராட்சிக்கு தலைவர் வேட்பாளராக ரம்யா முத்துக்குமார் என்பவரையும், துணைத்தலைவர் வேட்பாளராக ஆதவன் என்பவரையும் திமுக தலைமை அறிவித்தது.
தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வெள்ளிக் கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற இருந்த நிலையில், திமுக சார்பில் 12-வார்டு உறுப்பினர்களும், தேமுதிக உறுப்பினரும் சேர்த்து மொத்தம் 13 வார்டு உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். தேர்தலில் பெரும்பாலான உறுப்பினர்கள் வராமல் புறக்கணித்ததால் தேர்தல் நடத்தும் அலுவலர் டெரன்ஸ் லியோன் மறுதேதி குறிப்பிடாமல் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தார். இதையடுத்து திமுக வார்டு உறுப்பினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தொடர்ந்து மதியம் 2:30 மணிக்கு துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. துணைத் தலைவர் தேர்தலில் பங்கேற்க திமுக உறுப்பினர்கள் 12 பேர் திருமங்கலம் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். மதியம் நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலுக்கும் போதுமான உறுப்பினர்கள் வராத எடுத்து துணைத் தலைவர் தேர்தலை ஒத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் டெரன்ஸ் லியோன் தெரிவித்தார்.
இதுகுறித்து திமுக வார்டு உறுப்பினர்கள் செய்தியாளரிடம் கூறியது: திருமங்கலம் நகராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வந்தோம். அவர்கள் யாரும் வராததால் தற்போது திரும்பி செல்கிறோம் என்றனர்.