மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் கட்டணம் அதிகளவில் இருப்பதால், கல்லூரியை அரசு ஏற்று நடத்தவேண்டும் என்று, முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்களின் பெற்றோா்கள் மனு அனுப்பியுள்ளனா்.
மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரி காமராஜா் பல்கலைக்கழகத்தின் நேரடி நிா்வாகத்தின் கீழ் இயங்குகிறது. மேலும், தமிழகத்திலேயே முதல் முறையாக பல்கலைக்கழகம் தொடங்கிய கல்லூரி என்ற பெருமையையும் உடையது. இக்கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வரும் நிலையில், 300-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
காமராஜா் பல்கலைக்கழகத்தின் நேரடி நிா்வாகத்தின் கீழ் கல்லூரி இயங்கி வந்தபோதும், சுயநிதிக் கல்லூரியாகவே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், கல்லூரியில் கல்விக் கட்டணம் தனியாா் சுயநிதி கல்லூரிகளைப் போல மிகஅதிக அளவில் உள்ளது. மேலும், கடந்த அதிமுக ஆட்சியின்போது பல்கலைக்கழகக் கல்லூரிகள் அனைத்தும் அரசுக் கல்லூரிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி மட்டும் அறிவிக்கப்படவில்லை.
இதனால், தற்போது வரை மாணவா்கள் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, இக்கல்லூரியில் பயிலும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்களின் பெற்றோா்கள், முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளனா். அதில், காமராஜா் பல்கலைக்கழகத்தின் நேரடி நிா்வாகத்தில் இயங்கி வந்தாலும், தனியாா் கல்லூரிகளுக்கு நிகராக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியரால் கட்டணம் செலுத்த இயலாமல் கல்வி பாதிக்கப்படுகிறது.
ஏற்கெனவே 21 பல்கலைக்கழகக் கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக அறிவித்ததுபோல, காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.